மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர், காலாடி, மூப்பன், குடும்பன், பன்னாடி,தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள்.எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப் படுகின்றார்கள்.இவர்கள் முழுமையாக வேளாண்மைத் தொழில்களையே செய்து வந்தனர். இவர்கள் பொருளாதாரத்திலும் சமூக நிலையிலும் வீழ்ச்சியுற்றிருந்ததால் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு பட்டியல் சாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மிகவும் வீழ்ச்சியுற்றிருந்த நிலையில் இருந்த இந்த சமுதாயத்தினர் தற்போது கல்வி, அரசியல், பொருளாதாரம்போன்றவைகளில் முன்னேற்றமடைந்து பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் வீழ்த்தப்பட்ட தமிழ்க்குடிகளில் வெகுவேகமாக முன்னேற்றமடைந்து வரும் ஒரு சில சமூகங்களில் இந்த சமுதாயம் முன்னிலையில் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.